சென்னை: திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவர் தற்போது தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வருகிறார். 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். சமந்தா பணக்கார வீட்டுப் பெண்ணாக நடிப்பதாகவே படக்குழுவினர், மீடியாவில் கேட்டதற்கு சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த சஸ்பென்ஸ் சமீபத்தில் உடைந்தது. ஆனால், சில நாட்களாக 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் சில புகைப்படங்கள் திடீரென 'லீக்' ஆகின. சமூக வலைத்தளங்களிலும் அது வைரலானது.
கிளாமர் இல்லாமல் கருப்பான மேக்கப்புடன், பாவாடை தாவணியில் உள்ள சமந்தாவின் தோற்றமும், அந்தப் புகைப்படங்களும் மிகவும் இயல்பாக அமைந்துள்ளன. பூச்சி மருந்தடிக்கும் மெஷினிக்கு டீசல் ஊற்றும் புகைப்படம், எருமை மாடு மேய்க்கும் புகைப்படம் ஆகியவையும் வெளியாகி உள்ளன. படம் வெளிவருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் சமந்தா கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்த படக்குழுவினருக்கு அந்த சஸ்பென்ஸ் இப்போதே உடைந்துவிட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதனால், அந்தப் புகைப்படம் லீக் ஆனது குறித்து ஐதராபாத், சைபர் கிரைம் ஆணையரிடம் படக்குழுவினர் புகார் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து இது போன்று மேலும் புகைப்படங்களோ, அல்லது படம் சம்பந்தப்பட்டத் தகவல்களோ வெளிவந்தால் அது தங்களது படத்தைப் பெரிதும் பாதிக்கும் என அந்தப் புகாரில் கூறியுள்ளார்கள்.
இணையதளங்களில் முழு திரைப்படங்கள் வெளிவருவதையே இன்னும் தடுக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்போது அந்த வரிசையில் புகைப்படங்கள் கூட திருட்டுத்தனமாக வெளிவந்து கொண்டிருப்பது திரைத்துரையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.