சென்னை: கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தன்னுடைய தனிப்படையினருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட செல்ஃபியை காட்டி சக காவலர்கள் கலங்குகின்றனர். சங்கரன் கோவில் தாலுகா சாலைப்புதூரில் 1969ம் ஆண்டு பிறந்தவர் பெரியபாண்டியன். பிஎஸ்சி பட்டதாரியான இவர் 2000ம் ஆண்டு காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவையில் பயிற்சி எடுத்து பணியில் சேர்ந்திருந்தார். துணை ஆய்வாளராக தன்னுடைய காவல்துறை பணியைத் தொடங்கிய பெரியபாண்டியன், 2014ம் ஆண்டில் காவல்துறை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பெரியபாண்டியன் பொறுப்பேற்றுள்ளார்.
சொகுசு கார் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததோடு 8 கார்களையும் பறிமுதல் செய்துள்ளார். பணியில் சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் இந்தக் குழுவில் இடம்பெற்றால் குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தான் இவரை ராஜஸ்தான் சென்ற தனிப்படை குழுவில் இணைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து தான் 5 தமிழக காவல்துறையினரை மட்டுமே கொண்ட குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. இரண்டு நாட்கள் முன்னர் சென்னையை சேர்ந்த சிறப்பு தனிப்படை குழு ராஜஸ்தானை அடைந்துள்ளது. அங்கு தனிப்படை போலீசார் எடுத்துக் கொண்ட செல்ஃபிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடமையிலேயே கண்ணாய் இருந்த பெரியபாண்டியன் இந்த புகைப்படங்களில் கூட ஒதுங்கியே தான் இருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களைக் காட்டி இது தான் பெரியபாண்டியனின் கடைசி சிரிப்பு என்று கலங்குகின்றனர் சக காவல்துறையினர். ராஜஸ்தான் மண்ணில் வீரமரணமடைந்த பெரியபாண்டியனின் உடல் நாளை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இறுதிச் சடங்கிற்காக பெரியபாண்டியின் குடும்பத்தார் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர்.