சென்னை: முழு நேர அரசியலுக்கு வந்தால் நடிகர் விஷால் பெரும் வரவேற்பு பெறுவார் என லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்துள்ளார். சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோர் நிச்சயம் அரசியலுக்கு வந்தே தீருவோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் இளம் நடிகரான விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினரையும் திரையுலகத்தினரையும் ஆட்டம் காண வைத்தது. ஆனால் ஆர்கே நகரில் விஷாலை முன்மொழிந்த 10 பேரில் 2 பேர் பின்வாங்கியதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பு பெறும் நடிகர்கள் யார் என லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தனது மக்கள் ஆய்வு அமைப்பின் மூலம் சர்வே ஒன்றை நடத்தினார். அதில் முழு நேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பு பெறும் நடிகர்கள் வரிசையில் நடிகர் விஷாலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுகுறித்த சர்வேயில் நடிகர் விஷால் 15.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
விஷாலுக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் உள்ளார். அவர் இந்த சர்வேயில் 11.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மத்திய மாநில அரசுகளை டிவிட்டரில் விளாசி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த சர்வேயில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அவர் 10.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
நடிகர் அஜித் நான்காமிடத்தில் உள்ளார். அவர் 5.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த சர்வேயில் நடிகர் ரஜினிகாந்த் கடைசி இடத்தில் உள்ளார். அவருக்கு வெறும் 5.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.