சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை விவாதமாக எடுத்து பேசுவார். பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் கலந்துகொண்டு பிரச்னையை தீர்க்க முயல்வார்கள். இந்த நிகழ்ச்சியின் மாதிரியை நேற்று வெளியாகியிருக்கும் 'அருவி' படத்தில் காட்டியிருக்கிறார்கள். 'சொல்வதெல்லாம் சத்தியம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிகழ்ச்சி பற்றிய உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார்கள்.
நிர்மலா பெரியசாமி, சுதா சந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி 1500 எபிசோட் கடந்து சென்று கொண்டிருக்க, நேற்று வெளியான 'அருவி' படம் இந்நிகழ்ச்சியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத்தும் ட்ராமா தான், இதில் வரும் மக்களை டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக வேண்டுமென்றே அழ வைக்கின்றனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது எல்லாம் இயக்குனர் சொல்லிக் கொடுப்பது தான் என்பது போல் 'அருவி' படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
அருவி படத்தில் இந்த நிகழ்ச்சியின் பெயர் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறும் காட்சிகளுக்கு திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சாதாரண பெண்ணாக இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் அருவி, அங்கு நடைபெறும் சம்பவங்களுக்குப் பிறகுதான் தீவிரவாதி எனும் முத்திரை குத்தப்படுகிறாள். இந்த டி.வி. ஷோ காட்சிகள் அதிக நேரம் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் விளம்பரத்திற்காகவும் வேண்டுமென்றே அழ வைப்பது, பாதிக்கப்பட்ட தரப்பினரை வெறுப்பேற்றி சண்டை மூட்டி விடுவது, சமூகப் பிரச்னைகளுக்காக இல்லாமல் தொலைக்காட்சியில் சுயநலத்துக்காக மட்டுமே செயல்படுவது ஆகியவற்றை அப்பட்டமாக போட்டு உடைத்திருக்கிறார்கள். சௌபாக்கியா வெட் கிரைண்டருக்கு பதிலாக சாஹித்யா வெட் கிரைண்டர், பூர்விகா மொபைல்ஸுக்கு பதிலாக வேறு பெயர் என அப்படியே அந்த நிகழ்ச்சியை இமிடேட் செய்திருக்கிறார்கள். "ஆடி ஆஃபர்ல ஆடிப்போய்டுவீங்க ஆடி..." என விளம்பர கேப்ஷனை சொல்லும்போது தியேட்டரே குலுங்குகிறது.
லட்சுமி ராமகிருஷ்ணன் போல லட்சுமி கோபால்சாமியை நடிக்க வைத்திருக்கிறார்கள். மக்களை நம்பவைப்பதற்காக கிளிசரின் போட்டுக்கொண்டு அழுவது, நிகழ்ச்சியின் மீது அக்கஐயின்றி இருப்பது என ரொம்பவே டேமேஜ் செய்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைப்பதற்காக ஹைப் ஏற்றும் வேலைகளைச் செய்வது, பிரச்னைகள் நிகழும்போது கேமரா மேனை உள்ளே புகுந்து வீடியோ எடுக்கச் சொல்வது என ப்ரோகிராம் புரொடியூசராகவே வாழ்ந்திருக்கிறார் கவிதா பாரதி.
'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் சத்தியம்' ஷூட்டிங் நடக்கும் காட்சிகள் அப்படியே உண்மையான ரியாலிட்டி ஷோ செட்டுக்குள் போய் வந்த உணர்வைக் கொடுக்கும். படத்தின் முக்கியமான திருப்பங்கள் நிகழும் காட்சியாகவும் அதுவே இருக்கிறது.