சென்னை: ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், இதுவரை அந்த தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்காதது ஏன் என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த போட்டியாளர்களில், அதிமுகவுக்கு மட்டுமே டெபாசிட் தப்பியது. அவர்கள் 2வது இடத்தை பிடித்தனர்.
திமுக, பாஜக, நாம்தமிழர் மற்றும் பல சுயேச்சைகள் என மொத்தம் 57 பேர் டெபாசிட் இழந்தனர். இப்படி அமோக வெற்றி பெற்ற தினகரன், எதற்காக இன்னும், ஆர்.கே.நகருக்குள் காலடி எடுத்து வைக்க அஞ்சுகிறார், ஏன் நன்றி கூற செல்லவில்லை என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. கடந்தமுறை ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுகவில் இருந்து தினகரன் களமிறங்கினார். ஆனால் அப்போது இவர் படு ஜோராக பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இப்போது நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக தினகரன் தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஐடி ரெய்டுகள் காரணமாக எங்கிருந்துமே அவர் பணத்தை எடுத்து வந்து செலவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. மாநில அரசு தனது காவல்துறையை வைத்து ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுத்தது. அதேநேரம், தினகரனை வென்றேயாக வேண்டுமே என நினைத்து அதிமுக தரப்பு காவல்துறை உதவியோடேயே பணம் பட்டுவாடா செய்ததாக திமுக குற்றம்சாட்டுகிறது.
இப்படியெல்லாம் நெருக்கடிகள் வந்ததால் தினகரன் தரப்பு மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்கியதாம். கட்டுக்கட்டாகத்தானே பணம் கொடுக்க முடியாது, ஒத்தையாக 20 ரூபாய் கொடுத்தால்? என்று அவர்கள் போட்ட திட்டம்தான், டோக்கன் சிஸ்டம். அதன்படி, 20 ரூபாயை கொடுத்தால் அதற்கு பதிலாக 10000 தரப்படும் என நம்பிக்கை ஊட்டப்பட்டுள்ளது. பணம் கொடுப்பதை திமுகவினர் தடுப்பதாகவும், ஆளும் கட்சி காவல்துறை உதவியோடு தடுப்பதாகவும், எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தால் இந்த 20 ரூபாயை கொடுத்து ஓட்டுக்கு 10000 வாங்கலாம் எனவும் ஆசைவார்த்தை காட்டியதாக கூறப்படுகிறது. இதை நம்பி, குக்கர் சின்னம் தேயத், தேய வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர் வாக்காளர்கள்.
ஆனால், இதுவரை சொன்னபடி 10000 கொடுக்கவில்லையாம். இதனால் டோக்கன் பணத்தை தூக்கியபடி வாக்காளர்கள், தினகரன் ஆதரவாளர்களை தேடி வருகிறார்கள். ஆனால் மேலே இருந்து இன்னும் பணம்தர உத்தரவு வரவவில்லை என அவர்கள் பதிலளிப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தினகரன் தரப்பால் பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி லாக் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சிலரோ எப்படியும் அவர் தந்துவிடுவார் என்று நம்பினாலும் பெரும்பாலான மக்கள் கோபத்திலுள்ளனர். இதனால்தான் தினகரன் இன்னும் நன்றி தெரிவிக்க தொகுதி பக்கம் போகவில்லை என கூறப்படுகிறது.