இந்த வருட இறுதியில் தமிழ் சினிமா வியாபார வட்டாரம் எதிர்பார்க்கும் முக்கியமான படம் வேலைக்காரன். கடந்த நான்கு வாரங்களாக பெரும் வெற்றியை எந்த படமும் தரவில்லை. இதனால் தியேட்டர்கள் கடும் நிதி பற்றாக்குறையால் தடுமாறி வருகின்றன. இதனைப் போக்கும் வகையில் வேலைக்காரன் வசூல் இருக்கும் என்பது தியேட்டர்கள் நம்பிக்கை.
சிவகார்த்திகேயன் ரெமோ படத்திற்கு பின் கடந்த ஒரு வருட காலமாக கவனம் செலுத்தி நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகி. மலையாளமுன்னணி நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் கேரளாவில் வேலைக்காரன் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருக்கிறது. சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இடதுசாரி சிந்தனை அரசியல் படம் என வேலைக்காரன் இருக்கும் என்கிறது படக் குழு.
தனி ஒருவன் படத்தில் ஜெயம் ராஜா சொன்ன அரசியல் பார்வையிலிருந்து மாறுபட்டு இதில் தொழிலாளர்களின் ஊதியம் அது சுரண்டபடுவதை பற்றி ஜனரஞ்சகமாக கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
வேலைக்காரன் தமிழ்நாடு விநியோக உரிமை சுமார் 60 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளனர். இது அஜித் - விஜய் படங்களுக்கு நிகரான வர்த்தகம். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படங்களில் அதிக விலைக்கு வியாபாரமான முதல் படம். சுமார் 500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இத்தனை முக்கியத்துவம்மிக்க 'வேலைக்காரன்' அறிவித்தபடி டிசம்பர் 22 வருமா? வராதா? தாமதமாகுமா? என கோடம்பாக்கம் விவாதித்துக் கொண்டிருந்தது. டப்பிங் முடிந்து, தணிக்கை சான்றிதழ் வாங்கி விட்டார்கள். க்ளீன் யு கிடைத்திருக்கிறது.
போர்க்கால அடிப்படையில் அனிருத் தன் வேலைகளை செய்து வருவதால் திட்டமிட்டபடி முன்கூட்டியே வேலைக்காரன் தயாராகி விடும் என்கிறது படக் குழு.
வழக்கமாக சென்சார், சம்பள பாக்கி பைனான்ஸ் பஞ்சாயத்து காரணமாக ரீலீஸ் சிக்கலாகும். இந்த பிரச்சினைகள் வேலைக்காரன் படத்திற்கு இல்லை என்பதால் டிசம்பர் 22 ரீலீஸ் உறுதி என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். தியேட்டர்களில் முன்பதிவு வரும் திங்கள்கிழமையே தொடங்குகிறது.