சென்னை : தமிழ் சினிமாவில் வருடந்தோறும் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் வெளியாகும் நல்ல படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
முன்னணி நடிகர்களின் படங்கள் பல வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டாலும், நல்ல படம் என்கிற ரீதியில் பார்த்தால் தேறுவது வெகு சில திரைப்படங்களே. சமூகத்திற்குத் தேவையான கருத்துகளோடு எடுக்கப்படும் மாற்று சினிமாக்கள் ரிலீஸுக்கு தியேட்டர்கள் கூட கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. அப்படி வெளிவந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறுவது ஒன்றிரண்டு படங்கள் தான்.
தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய பிறகு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி வருகிறது. இந்த ஆண்டிலும் அந்த எண்ணிக்கை 200 படங்களைத் தாண்ட உள்ளது. 200 படங்கள் வந்தாலும் 20 படங்களாவது நல்ல படங்களாக வந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ 10 படங்கள்தான் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல படங்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
நித்திலன் இயக்கத்தில் வெளிவந்த 'குரங்கு பொம்மை', ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த '8 தோட்டாக்கள்', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாநகரம்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர்கள் மூவருமே அறிமுக இயக்குநர்கள் என்பதும் சிறப்பு. இந்த ஆண்டில் ஆச்சரியப்படும் வகையில் கடந்த நான்கு வாரங்களில் வெளிவந்த 25 படங்களில் 'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய படங்கள் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்தடுத்து மிகச் சிறந்த படங்களைப் பார்ப்பது தமிழ் சினிமா எதிர்காலத்தில் இன்னும் மேம்படும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிலும் 'அறம்', 'அருவி' ஆகிய படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டின் டாப் 10 படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறும் வாய்ப்புள்ளது. வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அப்படிப்பட்ட படங்களில் நடிக்கும் நடிகர்களும் இன்னும் அதிகமானால் தமிழ் சினிமா நிச்சயம் தலைநிமிரும்.
விமர்சன ரீதியாக நல்ல படங்கள் பேசப்பட்டால் மட்டும் போதாது. வசூல் ரீதியாகவும் நல்ல படங்கள் வெற்றி பெறுவது மட்டுமே அடுத்து வருபவர்களுக்கு ஊக்கமாக அமையும். தமிழ் சினிமா ரசிகர்கள் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி வித்தியாசமான சினிமாவை நோக்கைய தேடலைத் தொடங்கியிருக்கிறார்கள்.
ரசிக்கும்படியாகவும், சினிமா எனும் கலை ஊடகத்தை சமூகத்திற்கு கருத்து சொல்லும் வழியாகவும் செய்தால் ரசிகர்கள் ஈர்க்கப்படுவார்கள். நல்ல கலை வடிவம் நிச்சயம் அதற்கான பலனை அடைந்தே தீரும். இந்த வருடத்தின் இறுதி சில புது இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அடுத்தடுத்த வருடங்களும் தமிழ் சினிமா ஏற்றம் பெற வாழ்த்துவோம்.