திருவனந்தபுரம் : கேரள அரசின் சார்பில் சிறந்த பாடகர்களுக்கு ஆண்டுதோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளனது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலைக்கு வந்து சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது, "கேரள அரசு சார்பில் 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாடகர்கள் ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 2016-17-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சபரிமலையில் வருகிற ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையின்போது நடைபெறும் விழாவில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார். பாடகி சின்னக்குயில் சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி வருகிறார்.