சென்னை: தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலரது நடிப்பில் கௌதம் மேனன் நீண்ட காலமாக இயக்கி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையே பல காலம் ரகசியமாக வைத்திருந்தனர். சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டபோதும் இசையமைப்பாளர் 'மிஸ்டர்.எக்ஸ்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தர்புகா சிவா தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என பிறகு அறிவிக்கப்பட்டது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ஷூட்டிங் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்ஸ் 'மறு வார்த்தை பேசாதே...', 'நான் பிழைப்பேனோ...' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன. இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்போது அடுத்து சிங்கிளான 'விசிறி...' பாடலை வரும் 31-ம் தேதி வெளியிட உள்ளார்களாம். நியூ இயர் ஸ்பெஷலாக தாமரையில் வரிகளில் உருவான இந்தப் பாடல் வெளியிடப்பட இருக்கிறது. கௌதம் மேனன், தனுஷ் கூட்டணி முதன் முறையாக இணைந்த இந்தப் படம் எப்போது வரும் என இருவரது ரசிகர்களும் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஷூட்டிங்கை திட்டமிட்டதற்கும் மிகத் தாமதமாக படத்தை பல இடைவெளிகளில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில்தான் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தாலும் படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதும் அறிவிக்கப்படாமல் உள்ளது. எப்படியும் கோடை விடுமுறைக்குள் படம் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.