சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தனது அம்மாவிடம் போட்ட சபதம் நிறைவேறிவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து கீர்த்தி கூறியிருப்பதாவது,
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன். விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. என் அம்மா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 படங்களில் நடித்திருந்தார்.
ஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க என என் அம்மாவிடம் சபதம் செய்தேன். சூர்யா சாருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறிவிட்டது. சூர்யா சார் அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். ஆனால் ஏதாவது ஆலோசனை கேட்டால் தயங்காமல் உதவி செய்வார். நானும் கார்த்திக் சாரும் எந்த காட்சியிலும் சேர்ந்து நடிக்கவில்லை. அவர் எங்க அம்மா செட் என்றார் கீர்த்தி சுரேஷ்.