டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தற்போது சாத்தியம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யக் கூடாது என இன்றைய விசாரணையில் சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகாலம் சிறையில் இருந்து வருகிறார் பேரறிவாளன். தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது பேரறிவாளனை விடுதலை செய்ய சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்ததில் தவறு நடந்ததாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இதனடிப்படையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யலாமா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.